எனது இல்லத்தில் ஒரு விருந்து கொடுத்தேன். அன்று என் தோழி ஒருத்தி என்னைக் கேட்ட வினா என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. ஒரு இந்தியர் வீட்டுக்கு விருந்துக்கு வரும் எந்த ஒரு அயல் நாட்டவரும் எதிர்பார்ப்பவற்றில் முதன்மையானவை காரசாரமான உணவும், வீணை–மிருதங்கம் ஒலிக்க கீச்சுக்குரலில் பெண் பாடும் பாடல் இசையும். இவை மட்டும்தான் என்று நினைத்திருந்தேன், அன்று இவை இரண்டும் சரியாகத் தான் தயார் செய்யப்பட்டிருந்தது. “உயிரே..” திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இப்போதுதான் மேலே குறிப்பிட்டிருந்த அந்த வினா எழுந்தது: எப்படி உன்னால் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடாமல் இருக்க முடிகிறது என்று கேட்டாள் அந்தத் தோழி. சரியான கேள்வி — கண்டிப்பாக அந்தப் பாடலுக்கு ஷாருக் கானும் மனீஷாவும் நடனம் ஆடி இருக்கின்றனர். ரகுமான் இசை மிகவும் துடிப்பானது. நடனம் ஆட வேண்டியதுதான். ஏன் நாம் ஆடுவதில்லை?
இது தமிழகத்தில் மட்டும்தானா? தென்னகத்துக்கே இந்த உடல் மௌனம் சொந்தம் என்று நினைக்கிறேன். வட இந்தியர் ஒருவரின் விருந்திற்கு சென்றிருந்தேன்… அவர்கள் அனைத்து பாடல்களுக்கும் கை கால் அசைத்து ஆடத்தான் செய்தனர் (பம்பாய் படத்தில் வரும் உயிரே உயிரே… பாட்டுக்குக் கூட ஆடினான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்) . இந்த ஊரில் (போர்ட்டோ ரிகோ) தனித்தனியே உண்ணும் காகங்களைக் கூடப் பார்க்கலாம், ஆனால் பாட்டுக்கு நடனம் ஆடாத ஒருவனைப் பார்ப்பது கடினம். மென்மையான பாடலுக்குக் கூட ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஆடுவது தவிர்க்க இயலாத காட்சி (திருமண நிகழ்ச்சிகளில் அவ்வகை நடனம் மிகவும் சிறப்பு) . ஏன் நமக்கு மட்டும் இது வாய்க்கவில்லை? நம்மிடம் நடனம் இல்லையா? ஏன், இருக்கிறதே, பரதம் இருக்கிறது. அனைவரும் பரதம் பயில இயலுவதில்லை — பரதம் பயில வேண்டும் என்றால் முதற்கண் மூன்று வேளை சோறு வேண்டும் அல்லது 20 வயதில் பசிக்கு சோறு கிடைக்கும் என்ற உத்திரவாதமேனும் வேண்டும் (சலங்கை ஒலி ஒரு திரைப்படம் — அது அன்றாட வாழ்க்கையில் நடப்பதில்லை). பரதத்தை விட்டு விட்டால் பாமரனின் ஆட்டம் தான் (ராப், டிஸ்கோ, பிரேக் இதையெல்லாம் சொன்னால் மரியாதை கெட்டு விடும்) — இதற்கு ஒன்று, யாராவது இறந்திருக்க வேண்டும், இல்லை ஏதேனும் உள்ளே இறக்கி இருக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் எப்படி நம்மால் இசையைக் கேட்டவுடன் ஆட முடியும்? யோசிக்க வேண்டியது தான்.
நாம் ஆடுவதை விட பாடுவது அதிகம். சற்று வசதி படைத்தவர் இல்ல நிகழ்ச்சிகளில் கூட இசை நிகழ்ச்சிகள் தான் அதிகம். நடனத்தைப் புரிந்து கொள்ளும் அறிவு நம்மவர் அனைவர்ர்க்கும் இல்லை. நம்மில் அனைவரும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சியில் கூடி இருக்கிறோம் என்றால் பாட ஆரம்பித்து விடுகிறோம். பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும் — மானாட மயிலாட நடப்பதில்லை. ஒரு பாட்டு வானொலியில் ஒலித்துக் கொண்டிருக்கும் போது கூடவே பாடுவதில் அப்படி ஒரு மகிழ்ச்சி நமக்கு. நம்மவர் அனைவரும் பாடுவதற்கென பிறந்தவர். இதுதான் என்னுடைய பதில். யாரேனும் உங்களை இதே கேள்வி கேட்டால் என்னைப் போல் முதலில் முழித்துவிட்டு, மூன்று மாதம் கழித்து பதில் தெரிந்து கொள்ள வேண்டாம்.
பி. கு. இங்கு முடிந்தவரையில் வடமொழியைத் தவிர்த்து இருக்கிறேன். இன்னமும் தவிர்க்க முடியுமென்றால் உதவவும்.